
தருமபுரி அருகே அரசு பள்ளியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தருமபுரி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் மணிவண்ணன், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அறையிலிருந்து வெளியில் ஓடி வந்து தலைமையாசிரியர் சாந்திமணியிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் ஆசிரியர் மணிவண்ணன் தலைமறைவானார். போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து தேடி வந்த காவல்துறையினர் டிசம்பர் 16ஆம் நாள் கைது செய்து தருமபுரி மாவட்டச் சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் இரவு பத்தரை மணிக்கு ஆசிரியர் மணிவண்ணன் நெஞ்சு வலிப்பதாகச் சிறைக் காவலரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரைத் தருமபுரி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் மணிவண்ணன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
நீதிமன்றக் காவலில் இருந்தவர் உயிரிழந்ததால், நேரடியாகத் தருமபுரி குற்றவியல் நடுவர் விசாரணை செய்யவுள்ளார்.


