பெரியார் பற்றிய சர்ச்சை விவகாரத்தில் மவுனம் கலைத்த எடப்பாடி பழனிசாமி!

Advertisements

சென்னை:

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார்பற்றிப் பேசிய கருத்து பெரும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கும் சூழலில், இந்த விவகாரம்குறித்து முதல் முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

கடலூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைக் கூறி இருந்தார்.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சீமான் பேச்சுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், 70 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்றும் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இஸ்லாமியர்களை வேறு நாட்டவர்கள் என்றார் பெரியார். தமிழர் எனப் பேசுபவர்கள் இன எதிரியெனக் கூறியது யார்? தமிழ் பேசும் நாங்கள் யாருக்கு எதிரி? தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் எனக் கூறுவது பெரியார்.

பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர். பெரியார் தமிழை சனியன் என்றார். திராவிட சித்தாந்தத்தை வெட்டிச் சாய்ப்பதே எங்களின் பணி. பெரியாரின் கருத்துக்களை எதிர்ப்பதே எனது கொள்கை” எனக் காட்டமாகப் பேசினார் சீமான்.

சீமானுக்கு எதிராகத் திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக எனப் பல்வேறு கட்சிகளுக்கும் கொந்தளித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதன்முறையாக இந்த விவகாரம்பற்றி இன்று பேசி இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார்பற்றிப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “பெரியார்பற்றிச் சீமான் பேசியது வருத்தத்துக்குரியது. இறந்த பெருந்தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரியார் வாழ்ந்த காலத்தில் பாமக மக்களுக்கு அவரால் ஏற்பட்ட நன்மைகள் ஏராளம்.

அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்கள் பெரியாரால் ஏற்றம் பெற்றார்கள். அதையெல்லாம் மறக்கக் கூடாது. யாராக இருந்தாலும், அது போன்ற தலைவரை அவதூறாகப் பேசுவது விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *