Drug Dealers: விக்ரம் பட பாணியில் ஊசி, மாத்திரை, கஞ்சா சம்பவம்!

மதுரையில் 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், நூற்றூக்கும் மேற்பட்ட  போதை தரும் மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு ஆன்லைனில் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

மதுரையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இப்படியும் நடக்குமா என்று வியக்கும் அளவுக்கு நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.

மதுரை பீபிகுளம் உழவர் சந்தை பகுதியில் தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஷேர்  ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சோதனை நடத்தியபோது சில போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து ஆட்டோவில் இருந்தவர்கள் தப்பியோட முயன்ற டோலு என்கிற வேல்முருகன், கோணமண்ட கோபி என்கிற கோபிநாத், கடசாரி என்கிற அபிஷேக், ஆட்டோ டிரைவர் நவின் ஆகியோரை பிடித்து தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வேல்முருகன் என்பவர் மூலம் மற்ற 4 பேரும் ஆன்லைனில் கஞ்சாவும், போதை மாத்திரைகளையும் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

ஒரு கஞ்சா பொட்டலம் 250 ரூபாய்க்கும், ஒரு போதை மாத்திரை 500 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்துள்ளனர். இவர்கள் மதுரை மாநகரில் உள்ள பள்ளி – கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், செல்லூர் பகுதியில் உள்ள கடினமாக வேலை செய்யும் தொழிலாளர்களையும் குறி வைத்தும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மாத்திரைகளை பொடியாக்கி அதை தண்ணீரில் கலக்கி ஊசியில் மருந்துபோல ஏற்றி உடலில் செலுத்தினால் மிதமிஞ்சிய போதை தருமாம். விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி எப்படி திடீரென போதை மிட்டாய் சாப்பிட்டு மாறுவாரோ அந்த மாதிரி இந்த போதை ஊசி செலுத்திக்கொள்பவர்களும் மாறிவிடுவார்கள். இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்ய ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கே இயங்கி வருகிறது.

இதையடுத்து அவர்களிடமிருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், நூற்றூக்கும் மேற்பட்ட  போதை தரும் மாத்திரைகள்,  ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு ஆன்லைனில் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து இதுபோன்று போதை தரக்கூடிய மாத்திரைகளை  மருத்துவ பரிந்துரை இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்த கே.கே.நகர்  பகுதியை சேர்ந்த மெடிக்கல் ஷாப் உரிமையாளரான ராஜா முகமது உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

படங்களை மிஞ்சும் அளவுக்கு மாணவர்களை டார்கெட் செய்து வந்த இந்த கும்பல் கைது செய்யப்பட்டாலும், இதுபோல பல கும்பல்கள் இளம் மாணவர்களுக்கு வலை வீசி போதைக்கு அடிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தையே சீரழித்து வருகின்றனர். தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் புழக்கத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *