
சென்னை அருகே பீர்க்கன்கரணையில் சுடுகாட்டில் 2 பேர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ரவுடி கோஷ்டிகளின் மோதல், முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாகக் கொலை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால், தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறி வருவதாகக் கூறிவருகின்றனர். இதனால், சென்னை மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பீதியிலேயே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அருகே பீர்க்கன்கரணையில் சுடுகாட்டில் 2 பேர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய அண்ணாமலை, ஜில்லா என்பது தெரியவந்தது. இவர்கள் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


