
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்துப் பிரபலமான நடிகை கெளசல்யா, திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்…
90-களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்தவர் கெளசல்யா. இவரது இயற்பெயர் கவிதா. இவர் தமிழில் முதன்முதலில் நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க என்கிற திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடிப் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் கெளசல்யா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்ததால், மக்கள் மனதில் அதே பெயருடனே இடம்பிடித்துவிட்டார். இதனால் அவர் அந்தப் பெயரையே தான் அடுத்தடுத்து நடித்த படங்களிலும் பயன்படுத்தினார்.

இதையடுத்து நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, வானத்தைப் போல, குட்டி போன்ற வெற்றிப்படங்களில் நடித்துப் பேமஸ் ஆன கெளசல்யா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இதேபோல் சின்னத்திரை தொடர்களிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்த கெளசல்யா, குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டு விலகிவிட்டார். சினிமாவிலிருந்து விலகிய சமயத்தில் அவரது உடல் எடையும் அதிகரித்தது.

பின்னர் உடல் எடையைக் குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய கெளசல்யா, நட்பே துணை திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு அம்மாவாக நடித்திருந்தார். தற்போது 43 வயதாகும் கெளசல்யா, இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார். இதற்கான காரணத்தைச் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார் கெளசல்யா.
அதில் அவர் கூறியதாவது : திருமணம் செய்துகொள்வதற்கு சரியான ஆளை நான் பார்க்கவில்லை. அப்புறம் எப்படி திருமணம் செய்திருக்க முடியும். ஒருவேளை அப்படியொரு நபரைச் சந்தித்து இருந்தால் கல்யாணம் பற்றி யோசித்திருப்பேன். இடையே எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்காமல் இருந்தபோது கூட நான் ஒரு கிரிக்கெட் வீரரைக் காதலித்து வருவதாகவும், அவருக்கு எனக்குப் பிரேக் அப் ஆகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். அந்த வீரரின் பெயர் கூட எனக்கு மறந்துபோச்சு. அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டதே இல்லை.

இதுதவிர என்னால் என் பெற்றோரை விட்டுப் பிரிந்து இருக்க முடியாது. அவர்களும் என்னைவிட்டு பிரிந்து வாழமாட்டார்கள். அவர்களுடன் அதிகம் ஒன்றி வாழ்ந்துவிட்டேன்.
அதுவும் நான் திருமணம் செய்துகொள்ளாததற்கு ஒரு காரணமாக இருந்தது. மற்றபடி வேறொன்றும் இல்லையென அந்தப் பேட்டியில் கெளசல்யா கூறி இருக்கிறார்.

