
யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகச் செயினை திருடி விட்டு ஓடும்போது குறிப்பிட்ட சட்டையை மாற்ற வேண்டும் என்பதற்காக வேறொரு சட்டையை உடன் எடுத்துச் சென்றதும் அதைக் குறிப்பிட்ட இடத்தில் நின்று மாற்றிக்கொண்டு யாருக்கும் தெரியாதது போல மீண்டும் வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி.காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி (60). இவர், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்து வீட்டில் நுழைந்த மர்ம நபர், பத்மாவதி முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, அவரது கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்தார். பத்மாவதி செயினை பிடித்துக் கொண்டதால், கையில் சிக்கிய பாதி செயினுடன் மர்ம நபர் தப்பினார்.
தகவலறிந்து வந்த எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், வர்கீஸ் உள்ளிட்ட போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இடம்பெற்ற நபரின் புகைப்படத்தை வைத்து அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். அதில், அதே பகுதியில் சலூன் கடையில் வேலை செய்யும் ஆறுமுகம் (43) , செயின் பறிப்பு சம்பவம் நடந்த பத்மாவதி வீட்டைக் காட்டி இதுதான் அவரது வீடு எனவும் கூறியுள்ளனர். இதனால் போலீசார் அதிர்ச்சியடைத்தனர்.
மேலும் விசாரணையில், பத்மாவதி வீட்டின் மற்றொரு போர்ஷனில் அவர் குடியிருந்ததும், அவருக்குத் திருமணமாகி 2 மகன்கள் உள்ளதும் தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, ₹3 ஆயிரம் கடனுக்காக மூதாட்டியின் செயினை திருடியதை ஒப்புக்கொண்டார்.
யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகச் செயினை திருடி விட்டு ஓடும்போது குறிப்பிட்ட சட்டையை மாற்ற வேண்டும் என்பதற்காக வேறொரு சட்டையை உடன் எடுத்துச் சென்றதும் அதைக் குறிப்பிட்ட இடத்தில் நின்று மாற்றிக்கொண்டு யாருக்கும் தெரியாதது போல மீண்டும் வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

