
ஈரானின் மோசமான நடத்தை காரணமாக இதுவரை இலக்கு இல்லாத பகுதிகளிலும் கடுமையாகத் தாக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான சண்டையில் ஈரான் வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதையடுத்து, ஈரான் மீது அங்கிருந்து தாக்குதல் நடத்தப்படாத வரை தாக்குதல் நடத்தமாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது, தாக்குதலுக்கு உள்ளாகி தோற்கடிக்கப்பட்ட ஈரான், மன்னிப்பு கேட்டு அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது என்றும் இந்த வாக்குறுதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலின் காரணமாக மட்டுமே சாத்தியம் அடைந்துள்ளது என்றும் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஈரான், சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளிடம் தோற்றது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ஈரான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் ஈரானின் மோசமான நடத்தை காரணமாக இதுவரை இலக்காக இல்லாத பகுதிகள் தாக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், ஒருபோதும் சரணடையமாட்டோம் என்று ஈரான் தரப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



