
திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்கள் மீது கடன் சுமை சுமத்தியது தான் திமுகவின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட அதிமுக அரசு துணை நிற்கும் என்றும் அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
மணியாட்சி திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சி வந்த பிறகு அதை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்கள் மீது கடன் சுமை சுமத்தியது தான் திமுகவின் சாதனை எனக் குற்றம் சாட்டினார்.
நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஊழலை அமலாக்கத்துறை ஆதாரத்தோடு கண்டுபிடித்து 3 முறை எஃப்.ஐ.ஆர் போடச்சொல்லி கடிதம் அனுப்பியது என்றும் இந்த வழக்கில் அமைச்சர் இங்கே இருப்பாரா அல்லது உள்ளே இருப்பாரா என விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாய், என நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் திமுக ஆட்சியில் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று கூறினார்.



