Advertisements

தேவையின்றி திமுகவினரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மதிமுகவினருக்குத் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மதிமுக குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியது, திமுகவினருக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். திமுக தயவு இல்லாமல், தலைவர் கலைஞரின் தயவு இல்லாமல் வைகோ வளர்ந்தார் என சிலர் பேசுகின்ற செய்தியை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் நாங்கள் இருப்பதாகக் கூறினார்.
வைகோவின் வரலாறு தெரியாமல் மதிமுகவில் இருக்கின்ற சிலர் பேசலாம். ஆனால் திமுகவில் இருப்பவர்கள், மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள் என்று தெரிவித்தார். வைகோ நாடாளுமன்றத்தில் போய் கர்ஜித்த பிறகுதான் வைகோ என்ற அடையாளம் கிடைத்தது என்று கூறினார்.
ஆனால், அந்த நாடாளுமன்றத்திற்கு வைகோவை அனுப்பியது யார் எனில்? தங்கள் தலைவர் கலைஞர் தான் என்று சுட்டிக்காட்டினார். எனவே வைகோவின் வரலாற்றை பேசுவதற்கு முன், அனைத்தும் திமுகவினருக்குத் தெரியும் என்பதை நினைத்து மதிமுகவினர் பேச வேண்டும் என்று கூறினார்.
வைகோ தனது அரசியல் பயணத்தின் துவக்க காலத்தில், தலைவர் கலைஞர் மேடையில் பேசும்போது அவரது காலடியில் அமர்ந்திருந்த காட்சிகளை நேரடியாகப் பார்த்த சாட்சிகள் இன்னமும் இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, தேவையின்றி திமுகவினரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மதிமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
Advertisements


