
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த இலவச திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளியோருக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு முயற்சியால் இதுவரை 1098 திருமணங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில் கற்பகாம்பாள் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து 2 ஜோடிகளுக்கும் திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்துத் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்களுக்கு முதலில் மாலைகள் எடுத்துக் கொடுத்ததும் இரு மணமக்களும் மாலை மாற்றிக்கொண்டனர். அதன் பிறகு மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.
மணமக்களுக்குத் தாய் வீட்டு சீதனமாகக்4 கிராம் தங்கம் தாலி, கட்டில், மெத்தை, ஸ்டவ் அடுப்பு, குக்கர், மிக்சி, கிரைண்டர், சில்வர் பாத்திரங்கள், பூஜை தட்டு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு நல்ல பல காரியங்களைச் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இப்போது 1100-வது திருமணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூலம் நடத்தி நிறைவேற்றி வைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மயிலைத் த.வேலு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

