
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக சார்பில் இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் இணைந்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்காததாலும், தனக்கு வழங்கப்பட்ட ‘கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்’ என்ற பொறுப்பில் அதிருப்தியில் இருந்ததாலுமே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்த நிலையில், இந்த ராஜினாமா தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



