ஆ.ராசா மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் வன்னி அரசு.!

Advertisements
“அண்மைக்காலமாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்” என அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். ‘தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றவர்களுக்கு வெட்கமில்லை’ என்ற ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், “எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்கின்ற ஒரு வரையறை இல்லாமல் ஆ.ராசா பேசுகிறார்” என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 108 இடங்களை வென்று தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அமைத்தது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் மீது கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, அமைச்சரவையில் பங்கேற்றபோதே, விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளைக் குறிவைத்து அவர் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நேற்று மத்திய பாஜக அரசின் நீட்தேர்வு மற்றும் இந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும் அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா கடுமையாக விமர்சித்தார்.
எங்கள் கூட்டணி எம்.எல்.ஏ-க்களை உங்கள் கட்சிக்கு ஆதரவு தர அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்களை அமைச்சர்களாக்குவதற்கு உங்களுக்கும் வெட்கமில்லை; அந்த அமைச்சரவைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற கட்சிகளுக்கும் வெட்கமில்லை என தவெக குறித்தும் விசிக, காங்கிரஸ் மற்றும் ஐயூஎம்எல் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார் ஆ.ராசா.
இந்நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், “ஆ. ராசா சமீபகாலமாக மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்கின்ற ஒரு வரையறை இல்லாமல் பேசுகிறார்.
மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர், ஆ.ராசாவை அழைத்து கண்டிக்க வேண்டும். அவருடைய செயல்பாடுகள் விடுதலை சிறுத்தைகளை குறிவைத்து, தூண்டிவிடுவதாக உள்ளது.” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
திமுக அன்றைக்கு வெறும் 96 இடங்களில் தான் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளின் ஆதரவையும் திமுகவிற்கு அளித்தோம். திமுகவிற்கு காங்கிரசும், விடுதலை சிறுத்தைகளும் ஆதரவு கொடுத்தன. அப்போதெல்லாம் ஆ.ராசா பொங்கவில்லை, மகிழ்ச்சியாக இருந்தார்.
அந்த ஐந்தாண்டுகளும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று தான் கூறினார். ஆகவே இவ்வாறு பேசுவதென்பது அவருக்கே சரியா என்பதை அவருடைய குணத்திற்கே விட்டு விடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *