
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்குவது குறித்துச் சட்டமன்றத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் சுகாதாரத்துறை இயக்குநராகச் செவ்வேல் நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு முதலமைச்சர் ரங்கசாமிக்குத் தெரியாமல் வெளியானதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் ரங்கசாமி தனக்குத் தெரியாமல் தன்னுடைய துறையில் இருந்து ஓர் ஆணை வந்ததால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி விடலாமே என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறியுள்ளார்.
துணைநிலை ஆளுநர் பங்கேற்ற மத்திய அரசின் விழாவை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் முதலமைச்சரைச் சமாதானப்படுத்த முயன்றனர்.
இந்நிலையில் என் ஆர் காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திர பிரியங்கா, பாஸ்கர், ரமேஷ், ஆறுமுகம், இலட்சுமி காந்தன் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து ஒரு கடிதத்தைக் கொடுத்தனர்.
அதில் புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி பெறுவது குறித்து விவாதிக்க உடனடியாகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.



