Dharmendra Pradhan:நீட் விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

புதுடில்லி: ‘நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகச் சர்ச்சை எழுந்த நிலையில், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு ஒரே கோரிக்கை’ என உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். இந்நிலையில் ஆங்கில சேனலுக்கு, தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி: நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டார்கள்.

மறு தேர்வு
குறைவான தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டதால், சில மாணவ, மாணவிகளுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் மத்திய அரசிற்கு உடன்பாடு இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப் படி கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவ, மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை
இரு இடங்களில் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் உள்பட யாரும் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *