
திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பது கருத்துக்கணிப்பு மட்டுமல்ல, அதுதான் உண்மையும் கூட என்று தெரிவித்தார்.
அதாவது, மிகப்பெரிய அளவில் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும், காஷ்மீரில் வேட்பாளர்களே கிடைக்காத பாஜகவுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்குமே தவிர அவர்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.
தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி. மூலமாக ஆயிரம் ஆயிரம் கோடிகளைப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு. தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரணத் தொகைகளை அளிக்காமல், வாட்டுகின்றனர் என்றும், வரியாகக் கொடுத்த பணத்தை நிவாரணமாகக் கேட்டால் அவர்கள் வீட்டு பணத்தை கேட்பதுபோலத் திருப்பிக் கொடுக்க மறுப்பதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசுக்கு மனித தன்மை இருக்கிறதா என்றும், பாஜக கூட்டணி அரசு 150 நாட்களைத் தாண்ட முடியாது என்றும், அவர்கள் விரைவில் வீழ்ந்து விடுவார்கள் என்று தெரிவித்தார்.



