
நியூயார்க்: முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் – அதிபர் ஜோப்பைடன் இடையிலான முதல் விவாதம் ஜூன் 27ல் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப்பை குறிவைத்து பிரசாரம் செய்வதற்காக 50 மில்லியன் டாலரை (ரூ.417 கோடி) அதிபர் ஜோப்பைடனின் ஜனநாயக கட்சி ஒதுக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் நான்கரை மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோப்பைடன், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருவரும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் விவாதம் அட்லான்டாவில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக டிரம்ப் பற்றி அமெரிக்க மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டுவதற்காக, ஜோப்பைடனின் தேர்தல் குழு வித்தியாசமான திட்டத்தை வைத்துள்ளது.
அதிபராக இருந்தபோது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது, அவதூறு வழக்கு, பாலியல் வழக்கு, ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளியெனப் பல்வேறு வழக்குகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் டிரம்பை பற்றி நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக, விளம்பர பிரசாரத்திற்கு மட்டும் 50 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.417.76 கோடி) ஜோப்பைடனின், ஜனநாயக கட்சி ஒதுக்கியுள்ளது.
ஜோப்பைடன் – டிரம்ப் இடையிலான முதல் விவாதத்திற்கு முன்னதாகவே, டிரம்பின் குற்றச்செயல்களை டிவி, மொபைல் போன் உள்ளிட்ட ஒளிபரப்பு சாதனங்கள் வழியாக நாட்டின் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர். ‘இந்தத் தேர்தல், உங்கள் குடும்பத்திற்காகப் போராடும் அதிபருக்கும், ஒரு குற்றவாளிக்கும் இடையிலான தேர்தல்’ என்ற வாசகங்களை உள்ளடக்கி இந்த விளம்பர பிரசாரத்தை பைடனின் தேர்தல் குழு முன்னெடுக்கிறது.


