வரலாறு காணாத போர் ஆரம்பம்.! ட்ரம்ப் போடும்  மாஸ்டர் பிளான்..!

Advertisements

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. செங்கடல் பகுதியில் சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான மற்றும் நேரடித் தாக்குதலை முன்னெடுப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரித்துள்ளார்.

பிரபல செய்தித் தளமான ‘ஆக்சியோஸ்’ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது இந்த அதிரடித் தகவலை வெளியிட்ட ட்ரம்ப், இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவிலான தாக்குதலாக இது இருக்கும் என்றும், அதற்கான இறுதி முடிவை எடுக்கும் நிலைக்குத் தமது நிர்வாகம் நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலர்  என்ற குறியீட்டைத் தாண்டி உயர்ந்துகொண்டிருக்கும் இக்கட்டான சூழலில் ட்ரம்பின் இந்தக் கருத்துகள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய நடவடிக்கையால் ஏற்படும் பிராந்திய மற்றும் பொருளாதார விளைவுகளை தாம் ஒப்புக்கொள்வதாகவும், ஆயினும் இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், இத்தாக்குதலுக்கு இஸ்ரேலின் உதவியை நாடினால் அவர்கள் இரண்டே நிமிடத்தில் பதிலளிப்பார்கள் என்றாலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா எவரின் ராணுவ உதவியையும் நாடப்போவதில்லை என ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில்,  ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 13-வது இரவாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகே ட்ரம்ப் இந்த புதிய வியூகம் குறித்துப் பேசியுள்ளார். பதற்றத்தின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, ஈரானில் உள்ள தனது தூதரகப் பணியாளர்களைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக பிரித்தானியா புதன்கிழமை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, செங்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனது இரண்டு கப்பல்களைத் திரும்பப் பெறுவதாக ஜெர்மனி வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கிடையே, இஸ்ரேலிய நகரங்கள் அனைத்தும் தங்களது குண்டுத் தடுப்புப் புகலிடங்களைத் திறக்கத் தொடங்கியுள்ளன. இப்பகுதியில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் விமான சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் என்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மறுபுறம், செங்கடலில் பதற்றம் நிலவிவரும் சூழலில், ஹவுதி இயக்கத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதிகள், மூத்த ராணுவ ஆலோசகர்கள் மற்றும் அதிநவீன ஏவுகணை, ட்ரோன் உபகரணங்களை ஏமனுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கசிந்துள்ளன. ஜூலை 13-ஆம் தேதியன்று இடம்பெற்ற இந்த ரகசிய விமானப் பயணம் முதலில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையத்தை நோக்கிச் சென்றது.

எனினும், சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கத்தின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக ஹோடெய்தா நகரத்திற்குத் திசை திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 10 முதல் 21 வரை அதிகாரிகள் பயணித்துள்ளனர் என்றும், ஹவுதி படைகளுக்கு புதிய ஏவுகணை அமைப்புகள் குறித்துப் பயிற்சி அளிக்கவும் போர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் இவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், ஹவுதிகளுக்கு நிதி உதவியாகத் தங்கமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

“விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் சாதாரணப் பொதுமக்களே” என்று ஹவுதி இயக்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இருப்பினும், பாதுகாப்பு ஆய்வாளர்கள் அந்த விமானத்தில் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் பாகங்கள் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். சூயஸ் கால்வாயை செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடாவுடன் இணைக்கும் இரண்டாவது மிக முக்கியமான கடல் வழித்தடத்தின் பாதுகாப்பிற்கு ஹவுதிகளின் இந்தத் தாக்குதல்கள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

செங்கடலில் சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னணியில் ஈரானின் நேரடித் தலையீடும், ஹவுதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுத உதவிகளுமே பிராந்தியத்தில் போர் மேகங்களை அடர்த்தியாக்கியுள்ளன. ட்ரம்பின் நேரடி மிரட்டல் மற்றும் சர்வதேச நாடுகளின் படைகளின் விலகல் ஆகியவை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தையும், சர்வதேச வர்த்தகப் பாதைகளையும் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *