
முன்ஜென்ம பாவங்கள் தீர்க்கும் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகக் கோவில்
தேவிபட்டினம் கோவில் வரலாறு:
தல வரலாறு: புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாகப் பராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டினத்தில் உள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான்.
சக்கரதீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அவனுக்குச் சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்றுமுதல் தேவிபுரம் தேவிபட்டினமாக வழங்கிவருகிறது.

ராம அவதாரம்: படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பலனாகத் தேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் ராவணன். ஆனால் ராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே ராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது.
ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். இதை அறிந்த ராமன் சீதையை மீட்பதற்காகத் தென்திசை நோக்கி வந்தார். தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாகப் பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி ராமபிரானும் உப்புபடிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரானது. பின்பு 15 கி.மீ., தொலைவில் உள்ள தேவிபட்டினம் வந்தார்.
தலபெருமை:
ஆரவாரமில்லாத கடலின் நடுவே நவபாஷாணமாக அமைந்து நவக்கிரகங்கள் அருள் பாலித்து வருவது இத்தலத்து முக்கிய சிறப்பு.மூர்த்தி, தலம், கீர்த்தி என்று எல்லாமே ஒன்றிணைந்து பேரின்ப நிலையை அளிக்கும் தலம் தான் நவபாஷாணம் ஆகும். ஸ்ரீராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம். பிதுர் கடன் செய்பவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.

அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களைத் தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை.ஸ்ரீ ராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம்.பார்வதி பரமேஸ்வரனும் ஸ்ரீ இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கி இத்தலத்திலே சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.
சேது தலத்தைத் தரிசித்தாலே முன்கர்ம பாபங்கள் அனைத்தும் விலகிப் புண்ணியம் ஏற்படும்.புராண காலம் தொட்டு கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
தென்தமிழகத்தின் கடல் சூழ்ந்த பட்டினம் தேவிபட்டினம் என்னும் தேவிபுரம். ராமன் இலங்கையை அடைய பாலம் கட்டினான். இதைக் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷண மிட்ட தலமே தேவிபட்டினம் ஆயிற்று.
பிரார்த்தனை: முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம்.இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள், கல்வி, செல்வம் பெருகவும் இங்குப் பிரார்த்தனை செய்யலாம்.
நேர்த்திக்கடன்: நவதானியங்கள் படைத்தல், நவக்கிரக வலம், தானம் செய்தல், தோஷ பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும்.
திருவிழா: பத்து நாள் ஆடி அமாவாசை திருவிழா – நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் தீர்த்தம் ஆட இத்தலத்தில் கூடுவது வெகுசிறப்பு. தை அமாவாசை அன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
நீராடல்: எல்லாநாட்களிலும் எல்லாகாலங்களிலும் காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை நீராடலாம்.

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோவில், தேவிபட்டினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைத்துள்ளது.
மூலவர்: நவகிரகங்கள்
தீர்த்தம்: கடல் தீர்த்தம் (அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம்)
புராண பெயர்: தேவிப்பூர் (தேவிபுரம்)
ஊர்: தேவிபட்டினம்
மாவட்டம்: ராமநாதபுரம்



