
சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் காய்ச்சல் அதிகரித்துவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சளி, சளி, இருமல், உடல்வலியுடன் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். 10 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காகப் படையெடுத்து வருகிறார்கள்.
இதனால் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்திலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. தற்போது தினந்தோறும் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. சுகாதார அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் சுகாதாரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் காய்ச்சல் அதிகரித்துவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

