ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தாக்குதல் நடத்திய ஷாஜித் அக்ரம் இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர். ஷாஜித் தனது மகன் நவீத் அக்ரமுடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். இதில், 16 பேர் கொல்லப்பட்டனர். ஷாஜித்தும் போலீசாரால் கொல்லப்பட்டார்.
நவீத் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். 1998ம் ஆண்டு ஹைதராபாத்தில் பி.காம் படித்து விட்டு, ஷாஜித் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு, இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், குடும்பத்தினர் ஷாஜித்தை ஒதுக்கி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
எனினும், ஆஸ்திரேலியா சென்ற பிறகு 6 முறை ஷாஜித் இந்தியா வந்துள்ளார். சொத்துகளை விற்பது தொடர்பாகவே இந்தியா வந்து சென்றுள்ளார். உறவினர்களுடன் பெரியதாக தொடர்பில் இருக்கவில்லை. கடந்த 2017ம் ஆண்டு ஷாஜித்தின் தந்தை இறந்து போனார். அவரது இறப்புக்கும் ஷாஜித் வரவில்லை. கடைசியாக 2022ம் ஆண்டு ஹைதராபாத்துக்கு ஷாஜித் வந்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக தெலங்கான மாநில போலீஸ் டி.ஜி.பி ஷிவாதர் ரெட்டி கூறுகையில், ஷாஜித்தின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடத்தில் விசாரித்த போது, தீவிரவாத சிந்தனை அவரிடத்தில் இருக்கும் என்று நாங்கள் கருதவில்லை என்றே கூறியுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவை விட்டு சென்று விட்டாலும், இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வந்துள்ளார்.
கடைசியாக, இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தியே பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் சென்று வந்துள்ளார். அங்கு, ஐ.எஸ் இயக்கத்தினரிடத்தில் பயிற்சியும் பெற்றுள்ளனர் ‘ என்று தெரிவித்துள்ளார்.


