
டெல்லியில் சித்ரவதை செய்து இளம்பெண் கொடூர கொலை!
டெல்லியில் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரை சங்கிலியால் கை, கால்களைக் கட்டி சித்ரவதை செய்து, கொடூர கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி: டெல்லியின் மேற்கே திலக் நகர் பகுதியில் அரசு பள்ளியின் வெளியே சுவர் அருகே இளம்பெண்ணின் உடல் ஒன்றை போலீசார் நேற்று காலை மீட்டனர். 30 வயதுடைய அந்தப் பெண் வெளிநாட்டை சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டது. உடலில் சித்ரவதை செய்த அடையாளங்கள் இருந்தன.
அந்தப் பெண்ணின் உடலில் தீயால் சுட்ட காயங்கள் உள்ளன. இதனால், மனித கடத்தலுக்கான சாத்தியம் உள்ளது எனப் போலீசார் சந்தேகித்தனர்.அவருடைய கண்கள் பிதுங்கிக் காணப்பட்டன. இதனால், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் எனக் கூறப்படுகிறது.
ஒற்றை ஆடையுடன், குட்டை கவுன் அணிந்தபடி காணப்பட்டார். அவருடைய கை, கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு, பூட்டு போடப்பட்டு இருந்தன. உடலின் மேல்பகுதி ஒரு பெரிய, கருப்பு நிற பாலித்தீன் பையால் சுற்றப்பட்டு இருந்தது.
வெள்ளை நிற சான்ட்ரோ கார் உதவியுடன் அவருடைய உடல் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானாரா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் குற்றவாளியைத் தேடும் பணி நடந்தது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் குர்பிரீத் என்ற நபரைப் போலீசார் கைது செய்தனர்.அந்த இளம்பெண் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரை சேர்ந்தவர். அவரைச் சுவிட்சர்லாந்தில் வைத்துக் குர்பிரீத் சந்தித்துள்ளார்.
சம்பவத்தன்று, அவருடைய கை, கால்களைக் கட்டி போட்டுப் பின்னர் கொலை செய்துள்ளார். பழைய கார் ஒன்றை வாங்கி, அந்த உடலை அதில் போட்டு வைத்திருக்கிறார். அழுகிய நாற்றம் வந்ததும், சாலையோரம் உடலை வீசி விட்டு, தப்பி விட்டார். குர்பிரீத்திடமிருந்து ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என டெல்லி மேற்கு போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


