வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

Advertisements

தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் தாக்கத்தால் அங்குக் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது.

நாளை அந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வடமேற்கில் நகரும். எதிர்பார்த்ததை போல் அது தமிழக கடலோரத்தை நோக்கி வேகமாக நகர்வதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

11-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாகத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மழை தீவிரமாகும்.

10-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வருகிற 11-ந்தேதி மேற்கண்ட மாவட்டங்கள் (ராமநாதபுரம் நீங்கலாக) மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வருகிற 12-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வருகிற 13-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக மீனவர்கள் வருகிற 11-ந்தேதி வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *