
மிக்ஜம் புயலின் காரணமாக மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அக்டோபர் மாத கணக்கீட்டின்படி பயனாளிகளிடமிருந்து மின் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
அதோடு மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன.
மிக்ஜம் புயல் காரணமாக அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு 18-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத் துறை உத்தரவிட்டுள்ளது.



