
கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டுக்காக போராடுவோம் என கியூபா அதிபர் பெர்முடேஸ் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து அதன் நெருங்கிய நட்பு நாடான கியூபாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்திருந்தார். கியூபாவுக்கு இனி எண்ணெய் மற்றும் பணம் எதுவும் செல்லாது என்றும் தாமதிக்கமால் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ளுமாறு பரிந்துரைத்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கைக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கியூபா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினார். தொடர்ந்து கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டுக்காக போராடுவோம் என்றார்.
கியூபாவின் கடுமையான பொருளாதாரப் பற்றாக்குறைக்கு காரணம் கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்க செலுத்தி வரும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் தான் என்று கூறினார். மனித உயிர்கள் உட்பட அனைத்தையும் வர்த்தக நோக்கில் மாற்றியவர்களுக்கு கியூபாவை பற்றி பேச எந்தவொரு உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார்.


