இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகளை சேர்ந்த அணிகள் மோதுகின்றன. இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் ஆப்கானிஸ்தான் அணி மோதியது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக இப்ராஹிம் சத்ரான் 28 ரன்களை சேர்த்தார். பின்னர் வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் பந்துக்களை சிதறடித்து ரன்களை குவித்தார். 80 ரன்கலில் குர்பாஸ் அவுட்டான நிலையில், இக்ரம் அலி கில் அரைசதம் அடுத்து ரன் உயர்வுக்கு உதவினார். இறுதியாக 49.5 ஓவரில் 284 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. இங்கிலாந்து பந்து வீச்சில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக ஆப்கானிஸ்தான் பவுலிங் செய்ய, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ 2 ரன்களிலும், ஜொ ரூட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். டேவிம் மலான் 32 ரன்கள் வரை எடுத்து வெளியேறினார். எஞ்சிய வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் சுழல் பந்து வீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் 40.3 ஓவரில் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 69 ரன்கள் வித்யாசத்தில் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வென்றது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வென்றது இதுவே முதல்முறை. நடப்புத் தொடரிலும் முதல் இரு போட்டிகளில் தோல்வியைத் சந்தித்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ந்து 14 போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிமுகம் கண்டுள்ளது. இந்த வெற்றியை மைதானத்தில் கூடியிருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்களுடன் இணைந்து, இந்திய ரசிகர்கள் சேர்ந்து கொண்டாடினர்.
பலம் வாய்ந்ததாக கூறப்படும் இங்கிலாந்து அணி, 2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் அயர்லாந்து அணியிடம் அடி வாங்கியது. 2015 ல் வங்கதேசத்திடம் பங்கமான தோல்வியை சந்தித்தது. தற்போது ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்துள்ளது.