Corona JN.1 Virus: தடுப்பூசி தேவையில்லை!

Advertisements

புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாகக் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவிலும் சில நாட்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில், ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது; இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாகக் குணமடைந்து விடுகின்றனர்.

புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது. புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *