
மருத்துவமனைமீதான தாக்குதலுக்குக் கண்டனம்!
நியூயார்க்: காசா மருத்துவமனைமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 12வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை 4,200ஐ கடந்துள்ளது. போருக்கு நடுவே அமெரிக்க அதிபர் ஜோபிடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனைமீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களைக் காசா சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இச்சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்தும் அரபு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் வோல்கர் துர்க்,” மருத்துவமனைகள் புனிதமானவை, அவை எந்தச் சூழல்களிலும் பாதுகாக்கப்பட வேண்டியவை.
இந்தப் படுகொலையின் முழு அளவு எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் தாக்குதல்களும், படுகொலைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.இந்தப் பயங்கர சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரச் செல்வாக்குள்ள அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் மனிதாபிமான உதவிகள் உரியவர்களைச் சென்றடைய அனுமதிக்க வேண்டும்,”என்றார்.

