
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு பெரு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு முழுமையாகப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கெனவே ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்திருந்த நிலையில், அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு பிரிவினரும் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ஜூன் 15ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் 2025 மே முதல் நாளில் இருந்து இந்த ஆண்டு பிப்ரவரி 28 வரை பயிர்க்கடன் பெற்ற 14 இலட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு ஐயாயிரத்து 932 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றிருப்போதுக்குக் கடன்தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றிருப்போருக்கு 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.



