
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான மூன்று பேர் ஒரு நாள் காவல் முடிந்த பிறகு மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் கல்லூரி மாணவி மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தவசி என்கிற குணா, கருப்பசாமி என்கிற சதீஷ், காளீஸ்வரன் என்கிற கார்த்திக் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மூன்று பேருக்கும் டிசம்பர் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க பீளமேடு காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். . அந்த மனுவை விசாரித்த கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி சிந்து அவர்களை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதனை தொடர்ந்து மூன்று பேரையும் காவல்துறையினர் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்தபின் நீதிபதி சிந்து மீண்டும அவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.



