
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்…
சென்னை: கடந்த 2022-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைவாக மழை பெய்த காரணத்தினால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான வறட்சி ஏற்பட்டது.
இதன் காரணமாக 3 லட்சத்து 52 ஆயிரத்து 797 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்கள் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. இதில் 1,87,275 விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) 3 விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 62 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் திறந்து வைத்து, சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பிலான 3,907 பவர்டில்லர்கள் மற்றும் 293 விசை களையெடுப்பான் கருவிகள் வழங்கிடும் விதமாக மூன்று விவசாயிகளுக்குப் பவர்டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான் கருவிகளுக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

