
மீண்டும் தலைதூக்கும் ‘ரூட் தல’ கலாச்சாரம்!
சென்னை: பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர், ‘ரூட் தல’ பிரச்னையால், கத்தி, கட்டைகள் மற்றும் கற்களை வீசி நேற்று மோதலில் ஈடுபட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, அரும்பாக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு வரை செல்லும் தடம் எண்: 59 மாநகர பேருந்து, நேற்று மதியம் சென்றது. என்.எஸ்.கே., நகர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது, அதில் பயணித்த பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
பின், பேருந்திலிருந்து கீழே இறங்கிய இரு தரப்பினர், திடீரென, கத்தி, கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கியபடி, சாலையில் தெறித்து ஓடினர்; அச்சம்அடைந்த பயணியரும்அலறியடித்து ஓடினர். அரும்பாக்கம் போலீசார், 17 மாணவர்களை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தப்பிய மற்ற மாணவர்கள், கோயம்பேடு மேம்பாலம் அருகில், மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ், 18, என்ற மாணவரின் தலையில் வெட்டு விழுந்தது. அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரும்பாக்கம், கோயம்பேடு போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ‘ரூட் தல’ பிரச்னையால் மாணவர்களுக்கு மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. மாணவர்கள் கத்தியுடன் வெறித்தனத்துடன் ஓடிய ‘வீடியோ’ இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அதேபோல, சேலையூர் அடுத்த அகரம்தென் – தாம்பரம் செல்லும், தடம் எண்: 31ஏ பேருந்து, நேற்று முன்தினம் மாலை தாம்பரம் நோக்கிப் புறப்பட்டது. பேருந்தை, சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமந்தன், 42, என்பவர் ஓட்டினார். சங்கர நாராயணன் நடத்துனராகப் பணியில் இருந்தார்.
அகரம்தென் சாலையில், லட்சுமி அம்மாள் பாரத் பாலிடெக்னிக் கல்லுாரி அருகே பேருந்து வந்தபோது, சில மாணவர்கள் திடீரெனச் சாலையில் வந்து பேருந்தை நிறுத்த முயன்றனர். ஆனால், ஓட்டுனர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த கல்லுாரி மாணவர்கள், பேருந்தின் இடது பக்க கண்ணாடியைக் கல் வீசி உடைத்தனர்.
இதுகுறித்து விசாரிக்கும் சேலையூர் போலீசார், கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவரான நரசிம்மன் என்பவரைத் தேடி வருகின்றனர்.சமீபத்தில், சென்னை கடற்கரை மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நடந்த கல்லுாரி மாணவர்களின் மோதல் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க, ரயில்வே போலீசார் சார்பில், பச்சையப்பன் மற்றும் மாநில கல்லுாரிகளின் நிர்வாகங்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
விரைந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், மாணவர்களின் போக்கு, பொதுமக்களுக்கு மிகவும் தொல்லை தருவதாக அமைந்து விடும்.


