
கூலி திரைப்படம் ஆண்களை மையப்படுத்திய படமாக இருந்தாலும், என்னுடைய கதாபாத்திரம் குறித்தே அனைவரும் பேசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
‘கூலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். முதன்முறையாக அப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும், உடன் நடித்த நடிகர்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “ரஜினி சார் எப்போதுமே ரொம்ப கூலாக இருப்பார். அவர் எவ்வளவு பெரிய வெற்றிகளை கண்டுவிட்டார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சவுகரியமாக மாற்றும் வழி அவரிடம் இருக்கிறது.
‘கூலி’ படத்தில் சத்யராஜ் சாருடைய மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முழுக்க ஆண்களை மையப்படுத்திய கதையாக இருந்தாலும், அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசுவார்கள். அப்படியான ஒரு கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. இதில் நாகார்ஜுனா சார் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார்.
அவருடைய கதாபாத்திர வடிவமைப்பே அருமையாக இருக்கும். எப்போதுமே அவருக்கு ரசிகையாக இருந்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.



