
‘மிக்ஜாம்‘ புயல் கனமழை வெள்ளத்தால், பக்ஹிகாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆறு இணைக்க கூடிய சென்னை, எண்ணூர், நெட்டுக்குப்பம் கழிமுகப் பகுதியில் படர்ந்துள்ள ஆயில் கழிவுகளை மத்திய குழுவினர் நே ஆய்வு மேற்கொண்டனர்.
‘மிக்ஜாம்’ புயல் கனமழை வெள்ளத்தால், எண்ணூர் கடல் பகுதியில் சி.பி.சி.எல். தொழிற்சாலைகளில் இருந்து வெளியான ஆயில் கழிவால், முகத்துவார பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன.
மீனவர்களின் வலைகள், படகுகள் நாசமாயின. தவிர, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், ஆயில் கழிவு படிந்துள்ளது. எட்டு மீனவ கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.

இதை கூட்டுறவு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் சிவ்ஹரே, எரிசக்தி துறை துணை இயக்குனர் பவ்யா பாண்டே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் கொண்ட மத்திய குழுவினர், பர்மா நகர் இருளர் காலனி, மணலி திடீர் நகர், பாலசுப்பிரமணியம் நகர், எம்.ஜி.ஆர்., தெரு, பலராமன் தெரு, சி.பி.சி.எல்., நகர், கலைஞர் நகர், ஜகதாம்பாள் நகர், திருவொற்றியூர் – மணலி பிரதான சாலை, சடையன்குப்பம், நெட்டுகுப்பம் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
புகைப்படங்கள், வரைபடங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் எடுத்துரைத்தார். மேலும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.பி சங்கர் மிக்ஜாம், புயல் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சி.பி.சி.எல்., ஆயில் கழிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மத்திய குழுவினரிடம் எடுத்து கூறினார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் கூறியதாவது:மத்திய குழுவினர் மிக்ஜாம் புயலின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். எண்ணூரில் ஆயில் கழிவு பாதிப்பு குறித்து ஏற்கனவே தமிழக தலைமைச் செயலர் ஆய்வு செய்தார். தற்போது மத்திய குழுவினரும் நேரடியாக பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.
எண்ணூரில் ஆயில் கழிவுகள் அகற்றுவதில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதில் சுற்றுச்சூழல், மீன்வளத்துறை என பல்வேறு துறைகள் இணைந்து ஆயில் கழிவுகள் அகற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் நடவடிக்கைகளை ஒப்பிட்டு, தமிழக அரசின் மழை வெள்ள நடவடிக்கைகள், நிவாரண பணிகள் திருப்தி அளிப்பதாக மத்திய குழுவினர் தெரிவித்தனர்.மீனவர்களுக்கு இழப்பீடு, நிவாரணம் கொடுப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

