
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளார். அதில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆவது கூட்டம் தில்லியில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து, மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திமுக அரசு திறம்பட நடத்திவில்லை என்று கூறினார். தொடர்ந்து, மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று தெரிவித்தார். எனவே, நாளை மறுநாள் தில்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஒருவேளை கூட்டத்தை நடத்தினால் அதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


