
லக்னோ:
கிரேட்டர் நொய்டாவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பயிரிட்டு வந்த, வாலிபரைப் போலீசார் கைது செய்தனர். பல லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பயிரிட்டு, விற்பனை செய்து வருவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார், அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 50க்கும் மேற்பட்ட தொட்டிகளில், கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
இது தொடர்பாக, நொய்டாவை சேர்ந்த ராகுல் சவுத்ரி என்ற வாலிபரைப் போலீசார் கைது செய்தனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வீட்டில் கஞ்சா தோட்டத்தை வளர்ந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கிரேட்டர் நொய்டா துணை கமிஷனர் சாத் மியா கான் கூறியது
அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாகக் கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இந்தச் சோதனையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது. மீரட்டை சேர்ந்த ராகுல் சவுத்ரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் எனக் கூறினார்.


