
CAA அவசியமான சட்டம்.. அதை யாரும் தடுக்க கூடாது அமித் ஷா காட்டம்…
சிஏஏ குடியுரிமை சட்டமானது 1955-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டபோது , அதாவது இந்திய குடியுரிமை பெற மதம் ஒரு அடிபப்டையாக இல்லை. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்ட சிஏஏ சட்டத்திருத்தமானது மதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. இஸ்லாமியர் இதில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளனர். இது மக்களை மத ரீதியாகப் பிரிக்கிறது என்பதால், சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நேற்று மேற்கு வங்காளத்திற்கு மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் அமைப்புகளை மேலும் வலுப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது பா.ஜனதா அமைப்புகள், சமூக வலைத்தளம் மற்றும் ஐ.டி. பிரிவு உறுப்பினர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமித் ஷா “குடியுரிமை திருத்த சட்டம் நம் நாட்டினுடைய சட்டம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துகிறார். இந்த சட்டத்தை அமல்படுத்துவது எங்களது கட்சியின் உறுதிப்பாடு என்பதை தெளிவாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உறுதியாகக் கூறினார்.
வரும் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மேற்கு வங்காளத்தில் உள்ள 42 இடங்களில் பா.ஜனதா 35 இடங்களை பிடிக்கும். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க நாம் பணியாற்ற வேண்டும். பா.ஜனதா என்பது ஊடுருவலை தடுப்பது, பசு கடத்தல் மற்றும் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சிஏஏ (குடியுரிமை திருத்த சட்டம்) மூலம் குடியுரிமை வழங்கும் உன்னத சட்டமாகும் . இதனை யாரும் தடுக்க உரிமை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

