Bodinayakanur: பெற்ற குழந்தையையே கொலை செய்து நாடகமாடிய தாய்!

Advertisements

பெற்ற குழந்தையையே கொலை செய்துவிட்டு தாய் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கம்பம்: தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சினோகவிற்கு வளைகாப்பு நடத்தி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த மாதம் சினோகவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கம்பம் கிராமச்சாவடி தெருவில் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி பிறந்த குழந்தை வீட்டில் இருந்து திடீரென மாயமானது. பல இடங்களில் தேடிவிட்டு வீட்டில் இருந்த பால்கேனுக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் சந்தேக மரணம் என்றும், பின்னர் கொலை வழக்காகவும் மாற்றி போலீசார் விசாரித்து வந்தனர். பிறந்து 25 நாட்களே ஆன ஆண் குழந்தை தண்ணீர் கேனுக்குள் மூழ்கடித்து கொலை செய்தது யார் என்று இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் தாய் சினேகா மற்றும் பாட்டியிடம் துருவிதுருவி விசாரித்தனர்.

இதில் குழந்தையை கொன்றது தாய் சினேகா என உறுதியானது. சம்பவத்தன்று தாயை குளிர்பானம் வாங்க வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய சினேகா குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார். அதன்பிறகு சந்தேகம் வராத அளவுக்கு பாத்ரூமில் சென்று குளிப்பது போல சென்றுவிட்டார். பின்னர் குழந்தையை தேடுவது போல மற்றவர்களுடன் சேர்ந்து நாடகமாடி உள்ளார்.

ஆனால் போலீசார் விசாரணையில் அவர் கொலை செய்தது உறுதியானது. எதற்காக ஆண் குழந்தையை கொலை செய்தார். இவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையையே கொலை செய்துவிட்டு தாய் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *