Bike Thief: ஒன்றரை லட்சம் பைக்கை ரூ8,000 விற்ற புள்ளிங்கோ பாய்ஸ்!

Advertisements

ஒன்றரை லட்சம் மதிப்பிலான பைக்குகளை  திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து  திருடி 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்று மூன்று புள்ளிங்கோ பாய்ஸ் கைது…

திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து பைக் திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சம் மதிப்பிலான பைக்குகளை வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் சிக்கியது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7வது அவென்யுவில் வசித்து வருபவர் அருண்குமார். கடந்த 16ம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு வந்த அருண்குமார் வீட்டின் கீழ் அவரது விலை உயர்ந்த KTM பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அடுத்த நாள் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் முருகனிடம் அவர் புகார் அளித்தார்.

இந்நிலையில் கே.கே.சாலையில் நம்பர் பிளேட்டை கழட்டிவிட்டு வாகன பதிவு எண் இல்லாமல் மூன்று நபர்கள் அதிக வேகத்தில் சென்றதை பார்த்த தனிப்படை போலீசார் அவர்களை மடக்கி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் மூவரும் வந்த யமஹா ஆர்15 பைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி சென்னை மணலி புதுநகர் பகுதியில் திருடியது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

பின்னர் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த இளவரசன், யாழின்ராஜ், சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அசோக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இளவரசன் மீது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் அவர் சிறைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

அதேபோல அசோக், யாழின்ராஜும் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று வந்துள்ளனர். மேலும் மூவரிடமும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த இளவரசன், யாழின்ராஜ் இருவரும் சிறையில் இருக்கும்போது உடன் சிறையில் இருந்த அசோக் உடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் அசோக் சென்னையில் திருடும் விலை உயர்ந்த பைக்குகளை திருச்சிக்கு எடுத்துச் சென்று இளவரசன் மற்றும் யாழின்ராஜிடம் விற்று வந்துள்ளார். இளவரசன், யாழின்ராஜ் இனி திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடக் கூடாது எனப் போலீசார் எச்சரித்ததால் அவர்கள் பனியன் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

யாழின்ராஜ் மனைவிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதைச் சரி செய்யச் சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டதால் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தால் போதுமான பணம் கிடைக்காது என்பதால் திருட்டு தொழிலில் மீண்டும் ஈடுபட்ட தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் சென்னை வந்தால் அதிக பைக்குகளை கூட்டாகத் திருடலாமென அசோக் அழைக்க இவர்களும் வந்துள்ளனர். அப்போது தான் அருண்குமாரின் பைக்கை திருடியுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புடைய பைக்குகளை திருடி அதை வெறும் 8000 முதல் 10,000 வரைக்கு விற்று அதில் வரும் பணத்தில் கஞ்சா, பெண்கள் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து பைக் திருடும் கும்பல் சிக்கியதை அடுத்து அவர்களிடம் இருந்த திருடப்பட்ட காஸ்லி பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *