Ariyalur:பிறந்து 38 நாட்களே ஆன குழந்தை துடிதுடிக்கக் கொலை.. நாடகமாடிய தாத்தா! சிக்கியது எப்படி?

Advertisements

ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையைத் தண்ணீர் பேரலில் மூழ்கடித்துக் துடிதுடிக்கக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டுத் திருமணம் நடந்து உள்ளது. இந்நிலையில் சங்கீதா – பாலமுருகன் தம்பத்திக்கு கடந்த 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது. பின்னர் குழந்தை மற்றும் குழந்தையின் தாய் சங்கீதா ஆகியோர் உட்கோட்டையில் தனது பெற்றோர்களுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி அதிகாலையில் தனது குழந்தைக்குப் பால் கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு, சங்கீதாவும் தூங்கிவிட்டார். காலை எழுந்து பார்த்தபோது, தனது அருகில் இருந்த குழந்தை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் அனைவரும் தேடியுள்ளனர். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த கிடப்பது கண்டறியப்பட்டது. அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி அழுதுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசுவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தாத்தா வீரமுத்துவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பேரனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குழந்தையின் தாத்தா வீரமுத்து வயது 58 என்பவர் சித்திரை மாதம் (6.5.24) குழந்தை சாத்விக் பிறந்ததால், தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றும், தனது சம்மந்தி குடும்பத்திற்கும் ஆபத்து என்றும் அனைவரும் கூறியதாலும் மகள் சங்கீதாவின் திருமணத்திற்கு ஏற்கனவே நிறைய கடன் வாங்கியதாலும் மேலும் இந்தக் குழந்தை பிறந்ததால் இதற்குச் சீர் செய்ய வேண்டிய கடன் வாங்கியதாலும் விரக்தியில் இருந்துள்ளார்.

மேலும் தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ளதால் ஆண் மகன் இருந்தால் சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் அவனது உயிருக்கு ஆபத்து என்றும் ஆண் மகன் இல்லாததால் தாத்தாவாகிய தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும் அனைவரும் கூறியதால் தண்ணீர் நிரம்பிய பேரலில் போட்டுக் கொலை செய்ததாகக் கூறினார்.

இதனையடுத்து குழந்தையைக் கொன்ற தாத்தா வீரமுத்துவை கைது செய்தார். மேலும் உட்கோட்டை வீட்டில் வைத்து வீரமுத்து குழந்தையை எப்படி கொன்றார் என்பதை சாட்சிகள் முன்னிலையில் நடித்துக் காட்டி, போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள் பேச்சைக் கேட்டுச் சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என்ற அச்சத்தின் காரணமாகத் தாத்தாவே 38 நாட்களை ஆன பேரனைத் தண்ணீர் பேரலில் மூழ்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *