தமிழகத்தின் இரு தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை முதல் ஆளாக திமுக அறிவித்திருந்த நிலையில், இப்போது புதுச்சேரி இடைத்தேர்தலுக்கான திமுக திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக சார்பில் சேது செல்வம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் திமுக, சார்பில் போட்டியிடம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அதேபோல புதுச்சேரியில் தட்டாஞ்சாவடியிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தட்டாஞ்சாவடியில் புதுவை முதல்வரும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என். ரங்கசாமி வெற்றி பெற்றிருந்தார். அவர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற நிலையில், அவர் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்தே இப்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தான் தட்டாஞ்சாவடியில் திமுக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளராக சேது செல்வத்தை அறிவித்துள்ளது. தொழிலாளர் அமைப்புகள் மற்றும் மக்கள் போராட்டக் களத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த சேது செல்வத்தை திமுக வேட்பாளராக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சேது செல்வம் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்தவர். ஏஐடியுசி தொழிற்சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள அவர், தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளார். அரசியல் ரீதியாகவும் அவருக்கு நீண்ட அனுபவம் உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த அவர், கள பணிகள் தொடர்ச்சியாக பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தட்டாஞ்சாவடியில் போட்டியிட்டபோது, என். ரங்கசாமியை எதிர்கொண்டார். அந்த தேர்தலில் 7,500க்கும் அதிகமான வாக்குகளை பெற்றது கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகே அவர் திமுகவில் இணைந்திருந்தார். இப்போது திமுக சார்பில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.தட்டாஞ்சாவடி தொகுதியில் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற பிரச்சினைகள் முக்கிய பங்கு வகிக்கும்.
அங்கு தொழிலாளர்கள் கணிசமாக வசிக்கும் நிலையில், அவர்களை குறிவைத்தே சேது செல்வத்தை திமுக வேட்பாளராக களமிறங்குகிறது. அங்குள்ள மக்களிடையே ஏற்கனவே நல்ல அறிமுகமானவர். மக்கள் எளிதில் அணுகக்கூடிய வேட்பாளர் என்ற அவரது பிம்பமும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் சேது செல்வத்திற்கு தேர்தல் களம் எளிதானதாக இருக்காது. ஒரு பக்கம் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியின் வேட்பாளரை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இன்னொரு பக்கம் தவெக சார்பிலும் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. இது தவிர வலிமையான சுயேச்சைகளும் களமிறங்குவார்கள். இதனால் போட்டி கடுமையாகவே இருக்கும்.
கடந்த 2026 தேர்தலில் இந்த தொகுதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது ராஜினாமாவை தொடர்ந்தே இங்கு இப்போது தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலில் ரங்கசாமி இந்த தொகுதியில் 10,024 வாக்குகளை பெற்றார். தவெக கூட்டணியில் களமிறங்கிய விநாயகம் என்பவர் 5400 வாக்குகளை பெற்றார்.
அந்த தேர்தலில் சுயேச்சையாக சேது செல்வம் கிட்டத்தட்ட 4000 வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.




