
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் இன்று ஒரு நாள் பந்த் நடைபெற்று வரும் நிலையில், கன்னட திரைப்பட நடிகர், நடிகைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துஇன்று கர்நாடக மாநிலம் முழுவதும் பந்த நடைபெறுகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் கன்னட அமைப்புகள் சார்பாகப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்கு எதிராக முழக்கங்களும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படங்களும் எரிக்கப்பட்டது. மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டயர்களை எரித்தும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மேலும் விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் கெம்ப கவுடா விமான நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீசார் குண்டு கட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.

கர்நாடக மாநிலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலும் கர்நாடகாவில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என வலியுறுத்து நடைபெறும் போராட்டத்தில் கன்னட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், திரைப்பட் மற்றும் நாடக நடிகர்கள் ஶ்ரீநாத், ஸ்ருதி, உமாஶ்ரீ, ரகு முகர்ஜி, அனு பிரபாகர், விஜய் ராகவேந்திரா, முரளி, நீனசம் சதீஷ், பூஜா காந்தி, பாமா ஹரீஷ், அனிருத், பத்மா வசந்தி, ரூபிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் நடிகர் நடிகர்கள் போராட்டத்தில், ஷிவ்ராஜ்குமார், யாஷ், தர்ஷன், சுதீப் உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதே போலப் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.



