
மஹிஷியை வதம் செய்து வில், அம்புடன் காட்சி தரும் ஐயப்பன்! எருமேலி தர்மசாஸ்தா கோவில்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி தர்மசாஸ்தா கோவில், ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஐயப்ப பக்தர்களின் முக்கியமான சந்திப்பு இடமாக இது திகழ்கிறது. பேட்டா தர்மசாஸ்தா கோவில் என்றும் இதனை அழைக்கிறார்கள்.
கோவில் வரலாறு:
மணிமாலா நதிக்கரையில் எருமேலி நகரம் அமைந்துள்ளது. எருமேலி என்பது எருமகொல்லி என்ற சொல்லில் இருந்த வந்ததாகும். சுவாமி ஐயப்பன், அரக்கி மஹிஷியை இந்த இடத்தில் தான் வதம் செய்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. மஹிஷ் என்றால் எருமை என்பதாகும். மலையாளத்தில் இதற்கு எருமா என்று பொருள். இதனால் ஐயப்ப பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலங்களில் இக்கோவில் முக்கிய இடம்பிடித்துள்ளது. இதைச் சாஸ்தாவின் விசுக்தி சக்ர கோவில் என்றும் சொல்வார்கள்.
வில், அம்புடன் காட்சி தரும் ஐயப்பன்:
புலிப்பால் கொண்டு வருவதற்காகக் காட்டுக்கு வில், அம்புடன் புறப்பட்ட ஐயப்பனிடம் தேவர்கள், தாங்கள் அரக்கி மஹிஷியால் அனுபவித்து வரும் துன்பங்களைச் சொல்லி முறையிட்டனர். இதனால் உடனடியாகச் சென்று மஹிஷியை வதம் செய்து, தேவர்களின் துயரை போக்கினார் ஐயப்பன். மஹிஷியை வதம் செய்ய வில், அம்புடன் வந்த காரணத்தால் இங்குத் தர்மசாஸ்வாக வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பன் கையில் வில், அம்பு ஏந்திய கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்.

எருமேலி நகரில் இரண்டு கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில் வல்லியம்பலம் என்றும், மற்றொன்று கொச்சம்பலம் (மலையாளத்தில் அம்பலம் என்பது கோவிலைக் குறிக்கும்)என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கோவில்களும் 0.5 கி.மீ க்குள் அமைந்துள்ளன. சபரிமலை யாத்திரையின்போது புகழ்பெற்ற எருமெலி பேட்டத்துள்ளல் சடங்கானது வல்லியம்பலம் மற்றும் கொச்சம்பலம் அருகே துவங்குகிறது. இந்தக் கோவிலுக்கு அருகில்தான் எருமேலி ‘வாவர் மசூதி’ அமைந்துள்ளது. இந்தக் கோவிலை ஒட்டிய பகுதியில்தான் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் யாத்ரீகர்களுக்கு தங்குமிடம், உணவு, நீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
எருமேலி பேட்டத்துள்ளல்:

சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்தபோது தேவர்களும், இப்பகுதியில் வசித்த மலைவாழ் மக்களும் ஆடிப்பாடி அதனைக் கொண்டாடி உள்ளனர். இதனை நினைவு கூறும் விதமாகவே எருமேலியில் பேட்டை துள்ளல் ஆடுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மண்டல சீசனில் பக்தர்கள் தினந்தோறும் பேட்டை துள்ளல் ஆடினாலும், மகர ஜோதிக்கு முன் நடத்தப்படும் பேட்டை துள்ளல் நிகழ்வே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஐயப்பன் சாமிகள் உடலில் பல விதமான வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டு நடனம் ஆடுவர்.
வாவர் மசூதி:
இந்து-இஸ்லாமிய மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் வாவர் மசூதியிலும் வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். வாவர் என்பவர் ஐயப்பனின் நண்பர் என்றும், மகிஷி வதத்தின்போது ஐயப்பனுக்கு உதவியவர் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
புத்தன் வீடு:
எருமேலியில் மகினுியை வதம் செய்த ஐயப்பன் தங்கி இளைப்பாரிய இடத்திற்கு புத்தன் வீடு என்று பெயர். இங்கு மகிஷியை வதம் செய்ய ஐயப்பன் பயன்படுத்திய வாள் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
விழாக்கள் :
சிறிய அளவிலான இக்கோவிலில் பிப்ரவரி மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் உற்சவம் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.



