
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
நடப்பாண்டில் ரூபாய் 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக நடைபெறுகிறது. இதையடுத்து, நடப்பாண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 10ம் தேதி முதல் வரும் 13ம் தேதிவரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில், வரும் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) இயங்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 13ம் தேதிவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இயலாதவர்கள் வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்களுடன் ரூபாய் 1000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்கள் பெற உள்ளனர். பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக வழங்கப்பட உள்ள கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

