
அரிய வகை கனிமங்கள் தொடர்பாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எப்போதும் மோதல் உண்டு. சீனாவிடம் கொட்டி கிடைக்கும் அரிய வகை கனிமங்களுக்காக அந்த நாட்டிடம் அமெரிக்கா கையேந்தும் நிலை உள்ளது. உலக அளவில், 90 சதவீத அரிய வகை கனிமங்களும்,75 சதவீத லித்தியம் மற்றும் கோபால்ட்டும், 35 சதவீத நிக்கலும் சீனா வைத்திருக்கிறது.
மேலும், ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்க நாடுகளில் உள்ள சுரங்கங்களின் உரிமையையும் சீனா கையகப்படுத்திக் கொண்டுள்ளது. இப்படி, Rare Earth Elements மற்றும் முக்கிய உலோகங்களை உலகெங்கும் உற்பத்தி செய்து விற்பதில் சீனா முதலிடத்தில் உள்ளது. ஒரு வகையில் உக்ரைனில் நடக்கும் போருக்கும் இந்த அரிய கனிமங்களுக்கும் தொடர்பும் இருக்கிறது என்றே சொல்லலாம்.
நவீன தொழிற்துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படும், வேதியியல் ஒற்றுமை கொண்ட 17 கனிமங்கள் “அரிய புவி கனிமங்கள்” (Rare Earths) எனப்படும். சுத்தமான நிலையில் இந்த கனிமங்களைக் கண்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதால் இவை, “அரிய புவி கனிமங்கள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் ஐரோப்பாவின் மிகப்பெரிய கனிம இருப்புக்கள் கொண்ட ஒரு நாடாகும். உக்ரைன் நாட்டில் 100-க்கும் மேற்பட்ட மிக முக்கியமான கனிம வளங்கள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் முக்கியமானவை என வகைப்படுத்தும் 34 கனிமங்களில் 22 கனிமங்கள் உக்ரைனில் தான் உள்ளன.
மின்சார கார்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை உயர்தர அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு இந்த அரிய வகை கனிமங்கள் முக்கிய மூலப் பொருட்களாக உள்ளன. முக்கியமாக செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை கட்டமைப்பதிலும் இந்த கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த கனிமங்களை நிலா, செவ்வாய்கிரகம் இன்னும் பல கிரகங்களில் அமெரிக்கா தேடுவது வேறுவிஷயம் . இவை, அங்கு கிடைத்தாலும் அள்ளிவரும் செலவு அதிகம். தொழில்நுட்ப சிக்கல்களும் உள்ளன. இப்போதைக்கு ஒரே வழி பூமியில் இந்த கனிமங்களை எங்கிருந்து யார் அள்ளுவது என்பதே. தற்போது, இந்த விவகாரம் உச்சத்தை எட்டியுள்ளது.
அந்த வகையில், இந்தியா அரிய கனிமவள நாடாக அறியபடுகிறது. இதனால்தான், இந்திய பட்ஜெட்டில் தமிழக கடற்கரையில் கிடைக்கும் தாதுவளம் பற்றிய புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளது. அதாவது 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் தாது வளத்தைப் பயன்படுத்த, ஒடிசா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் இணைந்து, பிரத்யேக அரிய மண் தாது வழித்தடங்கள் (Rare Earth Corridors) அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்த திட்டம், அணுசக்தி கனிமங்கள் மற்றும் அரிய வகை கனிமங்களின் சுரங்கம், பதப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும். இனி தமிழக கடலோரங்களில் கிடைக்கும் கனிமங்கள் புதியவடிவம் பெறும். அப்போது . மோடிக்கு எதிராக பெரிய கொந்தளிப்பு வரும்படி இங்குள்ள சக்திகள் பிரச்னையை ஏற்படுத்த கூடும். பிரச்னைகளை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.
டைட்டானியம் எனும் தாதுவும் உக்ரைனில் அதிகம் கிடைக்கிறது. இந்த டைட்டாணியம்தான் உள்ளிட்ட பல தாதுக்கள்தான் தமிழகத்தில் நெல்லை , தூத்துக்குடி மாவட்ட தேரிகாடுகளில் மற்றும் கடலோரத்தில் குவிந்து கிடக்கிறது. 1990க்கு பின் இந்த தாதுக்களின் தேவை உலகில் அதிகரித்தது. அதாவது சோவியத் யூனியன் சிதறி உலக சமநிலை பாதிக்கபட்டபோதுதான் இந்த தாதுமணலை எடுக்க இந்தியாவில் அனுமதிக்கபட்டது.
தமிழக கடற்கரையின் வளத்தின் மீது ரத்தன் டாடாவுக்கே கண் இருந்தது. எப்படியாவது தேரிக்காட்டில் மண் எடுக்க டைட்டானியம் தொழிற்சாலை அமைத்து விட வேண்டுமென டாடா நிறுவனம் போராடியது. ஆனால், தென் தமிழகத்தில் இருந்த சக்தி வாய்ந்த தொழிலதிபர்களின் பலத்தால் டாடா நிறுவனமே பின்வாங்கி போய் விட்டது.
திமுக மற்றும் அதிமுகவுக்கும் இந்த தேரிக்காடு, கடற்கரை வளம் மீது கண் இருந்தது. இனி கிழக்கு கடற்கரை வளம் பெரிதாக கபளிகரமாகும் என பெரும் அச்சம் எழுந்தபோதுதான் மோடி அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. இந்த வளங்கள் தேசத்தின் வளம் என்பதால் பல விஷயங்களில் மோடி அரசு அசைந்து கொடுக்கவில்லை,.
இப்போது அந்த தேரிகாட்டு, கடற்கரை செல்வத்தை பாதுகாக்க மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. உக்ரைனில் அமெரிக்கா பல்லாயிரம் கோடிகளை கொட்டி தேடும் செல்வம் தேரிகாடு மற்றும் தென் தமிழகத்தின் கடற்கரையில் படிந்திருக்கின்றது. உலகில் கனிமங்கள் நிரம்பியுள்ள மணலின் மொத்த இருப்பு தோராயமாக 460 மில்லியன் டன். இதில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி , திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மணலில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மேனோசைட், தோரியம் ஆகிய கனிமங்கள் புதைந்துள்ளன. இவை, மிகவும் அரிய வகையைச் சேர்ந்தவை. சுமார் 2100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் பாறைகள் உருவாகின.
சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தால் உருமாற்றப் பாறைகள் உருவானபோது அதனுடன் சேர்ந்து கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் முதலிய கனிமங்களும் உருவாகியுள்ளன. குறிப்பாக தாமிரபரணி ஆறு மூலமாக இக்கனிமங்கள் கடலில் சேர்க்கப்பட்டு தென்மாவட்டக் கடற்கரைகளில் சேர்ந்துள்ளன.
இயற்கையின் கொடையான இந்த அரிய வகை கனிமங்கள் கடற்கரையில் சேர பல லட்சம் ஆண்டுகள் ஆகியுள்ளன. தென் தமிழக கடற்கரைப் பகுதியில் பல லட்சம் ஆண்டுகளாய் இயற்கை சேர்த்து வைத்திருந்த அரிய வகைக் கனிமங்கள் நிரம்பிய மணல் தாதுவை அள்ளி தொழிற்சாலைகள் மூலம் கார்னெட், இல்மனேட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய தனித்தனி கனிமங்களாகப் பிரிக்கின்றனர்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொரியா, அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.தற்போது, இந்த தேரிக்காடு மற்றும் தென் தமிழக கடற்கரை மணல் மீது அமெரிக்கா கண் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அமெரிக்காவின் ஆசைக்கு மோடி பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாகவே, இந்திய பட்ஜெட்டில் Rare Earth Corridors என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இனி நாமே , இவற்றை உற்பத்தி செய்து நமது சொந்த தயாரிப்புகளுக்கும் பயன்படுத்த முடியும். இதன்காரணமாக, பல்லாயிரம் கோடி நமக்கு மிச்சமாகும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.



