
திருவள்ளூர்: திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் ‘அரசின் பயிற்சிப் பள்ளியில்’ பயிற்சி பெற்றவர் அல்ல எனத் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிவிக்கையில்;
“வதந்தி: திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் நகையை அக்கோயிலின் தற்காலிக அர்ச்சகர் திருடி அடகு வைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த பயிற்சிப் பட்டறையில் தேர்வானவர் என்று வதந்தி பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?: கருமாரியம்மன் கோயில் நகையைத் திருடிய தற்காலிக அர்ச்சகர், தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பது முற்றிலும் பொய்யானதாகும்.
இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர், சண்முகம். தனது தந்தை சுப்பிரமணியன் ஐயரிடம் ஆகமப் பயிற்சி பெற்று அதன் அடிப்படையிலேயே பூஜை செய்யும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளார்.
சண்முகம் இக்கோயிலில் பணியாற்றியபோது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 57 கிராம் தங்க செயினுடன் கூடிய திருமாங்கல்யத்தைத் திருடி அடகு வைத்துள்ளார். திருமாங்கல்யம் மீட்கப்பட்டு மீண்டும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலி அர்ச்சகரான சண்முகம்மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு ‘முதல் தகவல் அறிக்கை’ பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச்செயலாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

