Advertisements

சென்னை மாநகராட்சி 14வது மண்டல குழு கூட்டத்தில் சொந்த கட்சிக்கு எதிராக 186 வது திமுக மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் குரல் எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவில் இருந்து விலகி திமுக ஆட்சியில் திமுகவில் இணைந்த இவர், தற்போது தவெகவில் இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில் திமுகவிற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். ஆனால், சென்னை மாநகராட்சியில் இப்போது ‘நிரந்தர கட்சியும் இல்லை’ என்ற பாணியில் ஒரு பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சி 14-வது மண்டலக் குழு கூட்டத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினரே தனது சொந்தக் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதுதான் தற்போதைய அறிவாலய ஹாட் டாபிக்.
14-வது மண்டலக் குழுவின் மாதாந்திரக் கூட்டம், மண்டலத் தலைவர் எஸ்.வி. ரவிச்சந்திரன் தலைமையில் வழக்கம்போல்தான் தொடங்கியது. அதிகாரிகள் ஒருபுறம், கவுன்சிலர்கள் மறுபுறம் என வார்டுப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டபோது, திடீரென வெடித்தார் 186-வது வார்டு திமுக கவுன்சிலரான ஜே.கே. மணிகண்டன். “கடந்த 4 வருஷமா என் வார்டுக்கு எந்த ஒரு திட்டப் பணியும் செய்யல” என்று அவர் மண்டலத் தலைவரைப் பார்த்து நேராகக் கேள்வி எழுப்ப, அரங்கம் அதிரும்படி சலசலப்பு தொற்றிக்கொண்டது.
“தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உங்க வார்டில் எல்லாப் பணிகளும் நடந்திருக்கு… என்ன நடக்கலன்னு சொல்லுங்க?” என்று மண்டலத் தலைவர் ரவிச்சந்திரன் திருப்பிக் கேட்க, இருவருக்கும் இடையே வார்த்தை யுத்தமே நடந்துவிட்டது.
விஷயம் வெறும் வார்டுப் பிரச்சினை மட்டும்தானா என்று விசாரித்தால், பின்னணியில் விஜய்யின் தவெக அரசியல் நிழல் ஆடுவது தெரியவந்துள்ளது. இந்த மணிகண்டன் ஒன்றும் பரம்பரை திமுக கிடையாது. முன்பு அதிமுகவில் இருந்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் ‘ரூட்டை மாற்றி’ திமுகவிற்கு வந்தவர். இப்போது தம்பியைத் தொடர்ந்து இவரும் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணையக் காய் நகர்த்தி வருகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் கசிந்துள்ளது.
“கட்சி மாறப் போறதாலதான், உண்மைக்குப் புறம்பா சொந்தக் கட்சி மேலேயே பழியைப் போடுறார்” என்று உடன்பிறப்புகள் கொந்தளிக்கிறார்கள். எது எப்படியோ, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வரும் அதிமுகவிற்கு மத்தியில், இப்போது ஆளுங்கட்சி வார்டுக்குள்ளேயே தவெக ஸ்கெட்ச் போட்டு நுழைந்திருப்பது சென்னை மாநகர திமுகவிற்குள் லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisements


