
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 குழுக்களாக பிரிந்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை: மிக்ஜம் புயல் பாதிப்பை கடந்த வியாழக்கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிட்டு, முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய குழுவை அனுப்பும்படி முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இ்ந்நிலையில், தமிழகத்துக்கு மத்திய குழுவை அனுப்புவது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் இதர துறைகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், மிக்ஜாம் புயல் பாதிப்பை கண்டறிய மத்திய குழுவை அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் சேதம் குறித்த இறுதி அறிக்கை அளித்ததும், மத்திய குழு பாதிப்பு குறித்த விரிவான மதிப்பீட்டை தயாரிக்கும். புயல் மிகக் கடுமையானதாக கருதப்பட வேண்டியதா என்பதை மத்திய குழு முடிவெடுத்து பரிந்துரைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்திய குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய குழுவினர், இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர். சென்னை பட்டாளம் டிமெல்லோஸ் சாலையில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.பட்டாளத்தில் வெள்ளம் சூழ்ந்தது தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பார்வையிட்டனர். மத்திய குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் இருக்கிறார்.


