Anti Corruption Police Raid: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களை குறிவைத்து சோதனை!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் வீட்டில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொள்வத் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து எம்எல்ஏவாகத் தேர்வானவர் பிரபு, இவர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக டிடிவி அணிக்குச் சென்றார்.

இதனையடுத்து சிறிது காலத்தில் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பினார். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி தியாகதுருவத்தில் உள்ள பிரபுவின் வீடு, பால் பண்ணை, தந்தை வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் உள்ளிட்ட 9 இடங்களில்  லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்தை மீறி அதிகளவு சொத்து சேர்த்ததாகப் புகார் வந்ததையடுத்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனையின் முடிவில் தான் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்களின் மதிப்பு தெரியவரும்.

இதே போல நேற்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வத்தின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 15 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *