ChampaiSoren:பா.ஜ.க.வில் இணைகிறார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி!

Advertisements

ராஞ்சியில் தனது ஆதரவாளர்களுடன் சம்பாய் சோரன் வரும் 30ம் தேதி பா.ஜ.க.வில் இணைய உள்ளார்.

ராஞ்சி:இந்தாண்டு இறுதியில் ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரியும் ஜே.எம்.எம். கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ராஞ்சியில் அவரது ஆதரவாளர்களுடன் வரும் 30ம் தேதி பா.ஜ.க.வில் இணைய உள்ளார்.

முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி இருந்த ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தில் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் அவர் முதல்-மந்திரியாக இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. இருப்பினும், அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாகச் சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் டெல்லி சென்று அவர் பா.ஜ.க. தலைவர்களையும் சமீபத்தில் சந்தித்திருந்தார். இப்போதே அவர் பா.ஜ.க.வில் இணையலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் சம்பாய் சோரன் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பழங்குடியின தலைவருமான சாம்பாய் சோரன் சற்று நேரத்திற்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். அவர் வரும் ஆகஸ்ட் 30 ம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைவார்” என்று அதில் பதிவிட்டிருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *