
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் பெருமை கொள்வதாகக் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியா என் அடையாளம். தேசத்துக்காகச் சேவை செய்வது என வாழ்நாளின் பாக்கியமாகக் கருதுகிறேன். மீண்டும் அணியில் இணைந்ததை கவுரவமாகக் கருதுகிறேன். என்ன இந்த முறை எனக்கு வேறு பொறுப்பு. ஆனால், எப்போதும் போல எனது இலக்கு ஒன்று தான். அது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்வது.
இந்திய அணி வீரர்கள் 140 கோடி இந்திய மக்களின் கனவுகளைத் தங்களது தோள்களில் சுமக்கின்றனர். அதனை மெய்ப்பிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியுள்ளார்.
42 வயதான கவுதம் கம்பீர் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். தொடர்ந்து 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டார். இதன் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இணைந்தார். அவரது வழிகாட்டலில் இந்தச் சீசனில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றிருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர், பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தபடி மூன்றரை ஆண்டுகள் செயல்படுவார். அவரது பதவிக்காலம் 2027-ம் ஆண்டு டிசம்பர் வரை இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

